tamilnadu

img

நிவாரணம்: குடை மிளகாய் விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 28- கிருஷ்ணகிரி மாவட்ட குடை மிளகாய் விவசாயிகள் நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பசுமைக்குடில் அமைத்து சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் வண்ண குடை மிளகாய் சாகுபடி செய்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக குடைமிளகாய் சாகுபடி செய்து விற்பனை செய்வதில் மிகவும் சிரமங்கள் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,தற்போது குடைமிளகாய் விற்பனை செய்வதில் காலதாமதம் ஆவதால் அதிகாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளை அணுகி ஒரு கிலொ குடைமிளகாய் 30 ரூபாய்க்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக குடைமிளகாய் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தோம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, கோவை விருதுநகர், மதுரை, சென்னை போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தோம். தற்போது விலை குறைவாக இருப்பதால் எங்களுக்கு முதலீட்டு தொகை கூட கிடைப்பது இல்லை. எனவே தோட்டக்கலை துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை அல்லது உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.